Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: இங்கிலாந்தில் கடந்த மாதம் புதியவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், இங்கிலாந்து-இந்தியா இடையேயான விமான போக்குவரத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மத்திய அரசு தடை விதித்தது.
பின்னர் இந்த போக்குவரத்து தடையை ஜனவரி மாதம் 7-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்தது. இந்நிலையில், மத்திய அரசு விதித்த தடை முடிவடைந்ததையடுத்து, இங்கிலாந்து - இந்தியா இடையேயான விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக குறைவான எண்ணிக்கையில் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே இன்று மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தில் இருந்து 246 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது.
இதற்கிடையில், வரும் 23-ம் தேதி வரை வாரத்திற்கு மொத்தம் 30 விமானங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. 15 விமானங்கள் இந்தியாவில் இருந்தும் 15 விமானங்கள் இங்கிலாந்தில் இருந்தும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.